பத்திரிக்கைகள் பாராட்டும் பத்து பத்து
Written on by மொக்கைச்சாமி
சினிமா இயக்குனர் தலைவாசல் விஜயை கொலை செய்து, சூட்கேஸில் பார்சலாக்கி கூவத்தில் வீசுகிறான் கொலையாளி. அவன் யார்? எதற்கு கொலை செய்தான்? தலைவாசன் விஜயின் மனைவி, வக்கீல், திருடன், ரவுடி,
சவ ஊர்வலத்தில் நடனம் ஆடுகிறவர் என சந்தேகம் பட்டாம்பூச்சியாக நபருக்கு நபர் தாவ, இறுதியில் கொலையாளி யார் என கண்டுபிடிப்பது கதை. வழக்கமான காதல், அடிதடி பாதையில் பயணிக்காததற்கு இயக்குனருக்கு சபாஷ்.
க்ரைம் த்ரில்லரில் திகட்டும் அளவுக்கு கவர்ச்சியை திணித்ததற்கு ஒரு குட்டு. தலைவாசல் விஜயின் பிணத்தை சூட்கேஸில் வைத்து கூவத்தில் வீசும் வக்கீல் பத்மாதான் கொலைகாரியோ என போலீஸைப் போல நாமும் சந்தேகப்படுகிறோம். இந்த சந்தேகத்தின் நிழல் தலைவாசல் விஜயின் மனைவி, திருடன், ரவுடி என வேறு வேறு நபர்கள் மீது விழுவது சுவாரஸ்யம்.
கணவர் வயதானவர் என்பதால் உளவுக்கார இளைஞனை கரெக்ட் பண்ணுகிறார் சோனா. கவர்ச்சி ஆறு கேள்விப் பட்டிருக்கிறோம். சோனா கடல். உறவுக்கார இளைஞனுடன் இவர் நடத்தும் கல்லாபம் இளமை சுனாமி. இதில் இரு பெண்களின் லெஸ்பியன் நடனம் வேறு.
பிக்பாக்கெட் திருடனுக்கும், போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட்டுக்கும் நடக்கும் சடுகுடு காமெடி கலக்கல். கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸ் அவனை கோட்டை விடுவதும், கொலைகாரனின் எதிர்பாராத முடிவும் கிளைமாக்ஸின் எதிர்பார்ப்பை குறைத்துவிடுகிறது. சுமாரான இசை. சராசரியான ஒளிப்பதிவு.
திரைக்கதையை நகர்த்திச் செல்லும் சுவாரஸ்யமும், சோனாவின் அன்லிமிடெட் கவர்ச்சியுமே படத்துக்கு பலம்.
நன்றி ; வெப்துனியா.கோம்
_________________________________________________________________
கடிகார முள் பத்து பத்துக்கு வரும்போது நடக்கிற ஒரு கொலையும், அதையொட்டிய விசாரணையும்தான் கதை! கடைசி வரைக்கும் கொலைகாரன் யார் என்பதை நம்மால் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்த இயக்குனர் ஸத்யமுக்கு ஒரு ஷொட்டு! கூடவே சதை திருவிழா நடத்தியதற்காக ஒரு குட்டு!
சினிமா இயக்குனர் தலைவாசல் விஜய், கூவம் அருகில் ஒரு சூட்கேசில் பிணமாக கிடக்கிறார். விசாரணையை துவங்கும் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட், மெல்ல மெல்ல கொலையாளியை நெருங்குவதற்குள், திருவல்லிக்கேணியின் முட்டுசந்துகளை போல திடுக் திருப்பங்கள். அதில் இளசுகளை சூடாக்கும் சோனாவின் எபிசோட் மட்டும் திகைக்க வைக்கும் ஜொள்ளாபிஷேகம்.
தலைவாசல் விஜயின் மனைவியான இவர், வீட்டில் தங்கிப்படிக்கும் உறவுக்கார பையனிடம் காதல் வயப்படுவதும், கள்ளக்காதலுக்கு தூண்டுவதும் கிளுகிளுப்பு.
இவர்களின் காதலுக்கு மின் விசிறி துணை போகும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் வயசு பசங்களின் வம்புக் கூச்சல்கள். திறந்த மார்பும், திமிற வைக்கும் அங்கங்களுமாக திரையில் தோன்றும் போதெல்லாம் திக்குமுக்காட வைக்கிறார் சோனா. இவர்தான் இப்படி என்றால், இவரையே மிரள வைக்கிறார்கள் ஒரு ஆட்டத்திற்கு வந்து போகிற அபிநயஸ்ரீயும், லக்ஷாவும்! அட, இதுவும் போதாது என்று லெஸ்பியன் ஆட்டம் போடும் இரண்டு இளசுகள். அடப்பாவிகளா?
கொஞ்சம் அப்பாவியாக இருந்தாலும், தலைவாசல் விஜய் ஸ்கூட்டரில் உட்கார்ந்தபடியே வாக்குவாதம் செய்யும் காட்சிகள் பலத்த சிரிப்பு.
ஸ்கூட்டரை விரட்டி தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இவர் சண்டை போட, பின்னாலேயே ஓடி வந்து விரட்டிப் பிடிக்கும் அந்த ரவுடி எபிசோட் கலகலப்பு. இன்னொரு பக்கம் பிக்பாக்கெட் மாறன், போஸ் வெங்கட்டை அலைகழிக்கிற காட்சிகளில் மொத்த தியேட்டருக்கும் வயிற்று வலியே வரும்.
வக்கீலாக நடித்திருக்கிறார் பத்மா. அட, தமிழ்நாட்டையே கலக்கிய அந்த பத்மாதான். இவர்தான் கொலையாளி என்று போலீஸ் நெருங்க, பிறகு இவரும் இல்லை என்கிற போது கொலையாளி யார் என்ற ஆர்வம் நம்மையும் பிடித்தாட்டுகிறது.
கடைசியில் கொலை நடந்த விதத்தையும், யார் கொலையாளி என்பதையும் சொல்லி முடிக்கிற கடைசி ரீலிலாவது அவனை போலீஸ் கைது செய்வது போல் அமைத்திருக்கலாம். இயற்கை கொடுத்த தண்டனை என்றாலும், அதில் சுவாரஸ்யம் மிஸ்சிங்!
கணேசனின் ஒளிப்பதிவு, கதைக்கு தேவையான அரையிருட்டை கொடுத்தது யதார்த்தம். இசை விசேஷமில்லை. பாடல் வரிகளிலும் வயாக்ராவை தடவியிருக்கிறார்கள்.
டீன் ஏஜ்கள் ஏக்கத்தை போக்கிக் கொள்ளலாம்!
-ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி ; தமிழ்சினிமா.கோம்.